திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், 55 கிராமங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், வடபாதிமங்கலம், கமலாபுரம் மற்றும் கூத்தாநல்லூர் உள்ளிட்ட 3 பிர்க்காக்களிலும், 55 கிராமங்கள் உள்ளன. இந்த 55 கிராமங்களிலும், வடபாதிமங்கலம் வரை ஒரு பகுதி, கமலாபுரம் வரை ஒரு பகுதி, குடிதாங்கிச்சேரி வரை ஒரு பகுதி, கொரடாச்சேரி வரை ஒரு பகுதி என 4 திசைகளும் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்குட்பட்டதாகும். 55 கிராமங்களிலும், 1,500 தெருக்களுக்கும் மேலான தெருக்கள் உள்ளன.
கரோனா தொற்று ஏற்பட்ட காலத்திலிருந்து, அத்தனை தெருக்களிலும், இரவு, பகல் பாராமல், கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் கூறியது:
திருவாரூர் மாவட்ட அலுவலர் அனுசியா உத்தரவுப்படி, கரோனா தொற்று மேலும் பரவி விடாமல் இருக்க, கிருமி நாசினி தெளித்து வருகிறோம். 5 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட தீயணைப்பு வாகனத்தின் தண்ணீரில், 50 லிட்டர் அளவுள்ள கிருமி நாசினியை கலந்து அனைத்து இடங்களிலும் தெளித்து வருகிறோம். மேலும், அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் அழைப்பு விடுத்தாலும், சென்று கிருமி நாசினி தெளித்து வருகிறோம் என்றார்.
மேலும், தீயணைப்புத் துறைக்கு டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு வந்த பிறகு, தீயணைப்பு வீரர்களான எங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து வருகிறார் என பெருமையுடன் தெரிவித்தார்.