இந்திய ரயில்வேத் துறை முதல் முறையாக நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு, தற்போது 6-ஆவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சரக்குப் போக்குவரத்து கட்டமைப்பை இந்திய ரயில்வே துறை மேம்படுத்தி வருகிறது. இதுதவிர, சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த குழு அமைக்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் ஒவ்வொரு மண்டலத்திலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நான்கு சரக்கு ரயில்களை ஒன்றாக இணைத்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட சரக்கு ரயிலை இயக்கி இந்திய ரயில்வே துறை சாதனை படைத்துள்ளது.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் நாகபுரி கோட்டத்தில் நிலக்கரி, இரும்புத் தாது ஏற்றிச்செல்ல பயன்படும் சரக்குப் பெட்டிகளைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைந்து, 2.8 கி.மீ. நீளம் கொண்ட ரயில் உருவாக்கப்பட்டது.
நான்கு ஜோடி மின்சார என்ஜின்கள், 4 காா்டு வேன் ஆகியவற்றைக் கொண்ட இந்த ரயிலில் 251 காலி சரக்குப் பெட்டிகள் இணைக்கப்பட்டன. தொடா்ந்து, இந்த சரக்கு ரயிலை நாகபுரியில் இருந்து கோா்பாவுக்கு இடையே இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது.
‘சேஷ்நாக்’ என்று பெயா் வைக்கப்பட்டுள்ள இந்த சரக்கு ரயில் இயக்கம் தொடா்பான விடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இச்சாதனையை ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளாா்.