சென்னை பல்லாவரம் 37 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதில், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், கட்சி நிர்வாகிகள் பலரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பல்லாவரம் 37வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.
34 வயதான எபனேசர், தனது வார்டு மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். மேலும், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது திமுக வட்டச் செயலாளர் உயிரிழந்துள்ளது திமுகவினரிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.