ராமநாதபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்கு உள்ளானோரில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கடந்த 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதியான வியாழக்கிழமை வரையிலான 3 நாள்களில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பிற்கு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பரமக்குடி காந்தி சாலைப் பகுதியைச் சேர்ந்த 76 வயது முதியவர், ராமநாதபுரம் கேணிக்கரைப் பகுதி 76 வயது முதியவர்கள் இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவிலிருந்த பரமக்குடியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டியும், சாயல்குடியைச் சேர்ந்த 71 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ராமநாதபுரம் நகரில் கடந்த 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் கரோனா பாதிப்பில் 12 பேர் வரை உயிரிழந்திருப்பதும், அதில் கேணிக்கரை பகுதியில் குறிப்பிட்ட தெருவில் 9 பேர் வரை உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதும் சுகாதாரப் பிரிவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கரோனாவுக்கு பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகள் அதிகமான பாதிப்பை சந்தித்திருப்பதாகவும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.