தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 3,965 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட எண்ணிக்கை தொடர்பான தரவுகள் அடங்கிய தமிழக சுகாதாரத் துறையின் இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி தமிழகத்தில் புதிதாக 3,965 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 3,907 பேர். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 58 பேர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,34,226 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,185 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 69 பேர் (அரசு மருத்துவமனை -51, தனியார் மருத்துவமனை -18) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,898 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 85,915 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 46,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மட்டும் 37,825 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் அரசு ஆய்வகங்கள் 53, தனியார் ஆய்வகங்கள் 49 என மொத்தம் 102 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.