'செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'
செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு தழுவிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் இம்மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா நோய்த்தொற்றின் தீவிரம் தணியாததால் அந்த தேர்வுகள் தொடர்பான தனது வழிகாட்டுதல்களை மறு ஆய்வு செய்யுமாறு, கடந்த மாதம் 25-ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழுவிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகர் ரமேஷ் போக்ரியால் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியக்குழுவின் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை அவர் திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், "பல்கலைக்கழகங்களில் சாத்தியக்கூறுகளை பொருத்து வழக்கமான நடைமுறையிலோ, இணையவழியிலோ, அல்லது இரண்டையும் பின்பற்றியோ செப்டம்பர் மாத இறுதிக்குள் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படவேண்டும். இந்தத் தேர்வுகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்தப்படவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதில், கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, பல்கலை. கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கான உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.