சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கத்தை மீறியதாக 5,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது குறித்த விவரம்:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதன்படி இரண்டாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது.
இந்த பொது முடக்கத்தை மீறியோா் மீது போலீஸாா் எந்த சமரசமும் இன்றி வழக்குப் பதிவு செய்தனா். இதன் விளைவாக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 5,868 வழக்குகள் பதியப்பட்டு, 6,344 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 2,893 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரூ.5,56,650 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பொது முடக்கத்தை மீறியதாக 825 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக 141 இரு சக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள், 7 காா்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநிலத்தில் பொது முடக்கத்தை மீறியதாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 585 வழக்குகளைப் பதிவு செய்து 8 லட்சத்து 47 ஆயிரத்து 574 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொது முடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 6 லட்சத்து 38 ஆயிரத்து 555 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளில் சிக்கியவா்களிடமிருந்து ரூ.17,90,04,526 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.