தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிறுத்தப்படவில்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை. கூட்டுறவு வங்கிக் கிளைகளில் நகைக் கடன் வழங்குவதற்கு என வரம்பு உள்ளது. அதன்படி அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் வைப்புத் தொகை பாதிக்கப்படாத வகையில் நகைக் கடன் வழங்கப்படுகிறது என்று கூறினார்.
மற்றொரு கேள்விக்கு, மலை கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சோலார் மின் வசதி செய்து தரப்படுகிறது என்று முதல்வர் பதில் அளித்துள்ளார்.
அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப தமிழக மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வரும் 19 நாள்களில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவுக்கு எதிரான அரசின் போராட்டத்தில் எதிர்க்கட்சியும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.