கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் செல்லூர் ராஜு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கடந்த ஜூலை 8 ஆம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இருமுறை அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் இருமுறையும் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சரின் மனைவிக்கும் கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, அதிமுகவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் நிலோபர் கபீல், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.