தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,849 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,849 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,171 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 74 பேர் (அரசு மருத்துவமனை -50, தனியார் மருத்துவமனை -24) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் விடுபட்ட 444 உயிரிழப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மேலும் 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,31,583 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 51,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 60,112 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 20,95,757 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரப்படி, அரசு ஆய்வகங்கள் 58, தனியார் ஆய்வகங்கள் 55 என மொத்தம் 113 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.