இடஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் மூலம் தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் நலன் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து எம்.பி. ஜோதிமணி, தனது சுட்டுரைப் பக்கத்தில், ரஜினிகாந்த் அவர்களே, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 70%, இந்திய அளவில் 52%, அவர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவில் மண் அள்ளிப் போட்டிக்கிறது பிஜேபி அரசு.
அவ்வப்போது கருத்துச் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ள உங்களுக்கு இது பற்றி கருத்தே இல்லையா? அல்லது மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, கந்த சஷ்டிக்கு எதிராக கருத்துப் பதிவு செய்தவர்களைக் கைது செய்து, கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலில் இருந்த விடியோக்கள் நீக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை நேற்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்ததாவது, கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்தவா்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட விடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமாா்ந்த பாராட்டுகள். இனிமேலாவது, மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்...ஒழியணும்.
எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்று ரஜினி கூறியிருந்தார்.
கந்த சஷ்டிக் கவசத்தை விமா்சித்து கறுப்பா் கூட்டத்தினா் விடியோ ஒன்று வெளியிட்டனா். அது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது குறித்து ரஜினி கருத்துக் கூறியிருக்கும் நிலையில், இட ஒதுக்கீடு குறித்து எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.