புதுச்சேரியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவித் துண்டு அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் புறவழிச் சாலை வில்லியனூர் பகுதி அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவித் துண்டு அணிவித்துள்ளனர். இதையடுத்து, அதிமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் சிலையை அவமதித்தது மட்டுமின்றி, பொது அமைதிக்கு களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.