ஒரே இரவில் 13 கடைகளில் பூட்டை உடைத்துத் திருட்டு: திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 13 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட கடை
திருடப்பட்ட கடை

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 13 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரமும், குளிர்பான கடையின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரமும், பேக்கரி கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரமும் மர்ம நபர்கள் புகுந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர்.

அதேபோல், வி.எம்.நகரில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நாணயம் மற்றும் சில்லறையாக வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தையும், பல்பொருள்கள் அங்காடியின் பூட்டை உடைத்து ரூ.2 ஆயிரம் சில்லறை நாணயங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்.

மேலும் பூங்கா நகரில் உள்ள மளிகைக் கடை, நெட் சென்டர், பேக்கரி ஆகிய 7 கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் கடைக்காரர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரே நாள் நள்ளிரவில் 13 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் வியாபாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களை தடுக்க காவல் துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து செல்ல வேண்டும் எனவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com