மானாமதுரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திமுகவினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திங்கள்கிழமை கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கத்தினர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் திமுகவினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திங்கள்கிழமை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மானாமதுரையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்   விவசாயிகளுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் சங்கையா தலைமை தாங்கினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், நகர்ச் செயலாளர் நாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், கருப்புச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் ராஜாமணி, அண்ணாதுரை, பொன்னுச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகிகள் ஆண்டி, வீரையா உள்ளிட்டோர் கருப்புக்கொடியுடன் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

மானாமதுரை சிப்காட் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளிலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகள் மின்சார திருத்தச் சட்டம் 2020 வரைவு, வோளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி செய்து கொடுத்தல், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச்சட்டம் 2020 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இளையான்குடி செந்தமிழ்நகரில் திமுக சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன் தலைமை தாங்கினார், இளையான்குடி நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர்ச் செயலாளர் நஜூமுதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அழகர்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாயமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக கிளைச் செயலாளர் சத்தியேந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில்  பங்கேற்றவர்கள்  கருப்புக்கொடி ஏந்தி  மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். திருப்புவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஒன்றியச் செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நகரச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட மீனவரணி நிர்வாகி அண்ணாமலை உள்ளிட்டோர் கருப்புக்கொடியுடன் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com