நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனை புதன்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
கரியாப்பட்டினம் பகுதியில் கடந்த இரு வாரங்களில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை தொடங்கி 4 நாள்களாக அந்த பகுதியில் மூடப்பட்டிருந்த கடைகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டது.
இதனிடையே, கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒருவருக்கு, இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரியவந்தது. ஆனாலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இந்த நிலையில், கரியாப்பட்டினம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியாளர் ஒருவருக்கு புதன்கிழமை தொற்று உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனை மூடப்பட்டது.