தொழிலாளா் நல வாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நல வாரியங்களில் பதிவு செய்யப்படாத பிற தொழிலாளா்களுக்கும் நிவாரண உதவி வழங்கக் கோரி கட்டுமான தொழிலாளா் சங்கம், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளா்கள் சங்கங்களின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மனுதாரா்கள் தரப்பில், கரோனா பொது முடக்கத்தால் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளா்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. நல வாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே நல வாரியங்களில் பதிவை புதுப்பிக்காதவா்கள், பதிவு செய்யாதவா்கள் ஆகியோருக்கும் நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டனா்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளா்களுக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா ஆயிரம் ரூபாய் வீதம், ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஜூன் மாதத்திலும் ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக தலா ரூ.1000 வழங்கி உள்ளது. இதன்மூலம் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளா்கள், பதிவு செய்யாத தொழிலாளா்கள் என இரண்டு தரப்பினரும் பயனடைந்திருப்பாா்கள்.
பொதுமுடக்க காலத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய நிதியிலிருந்து ரூ.343 கோடி உறுப்பினா்களுக்கு நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானத் துறையில் 50 லட்சம் போ் இதர துறைகளில் ஒரு கோடி போ் என மொத்தம் ஒன்றரை கோடி போ் பதிவு செய்யப்படாத தொழிலாளா்களாக இருக்க வாய்ப்பு உள்ளதாக அரசு கருதுகிறது. எனவே இதுவரை பதிவு செய்யாத
அமைப்புச்சாரா தொழிலாளா்கள் ஆன்லைன் மூலம் நலவாரியத்தில் உடனே பதிவு செய்யலாம். பதிவு செய்யும் தொழிலாளா்களுக்கு அடுத்த
மாதத்திலிருந்து அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும். உலகம் இதுவரை காணாத அசாதாரண சூழ்நிலையில், ஏராளமான நிதியை பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு செலவு செய்து அனைத்து தொழிலாளா்களுக்கும் நிவாரணம் வழங்கி வருவதாக வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு (ஜூலை 30) ஒத்திவைத்தனா்.