கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் மீண்டும் நீர்வரத்து தொடங்கியது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. கடந்த 5 மாதங்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து இல்லை. மேலும் பொது முடக்கம் காரணமாக சுருளி அருவி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால் அருவி வெறிச்சோடியது.
இதனிடையே, தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து தரும் ஓடைகளான அரசிப்பாறை, ஈத்தைப் பாறை பகுதிகளில் நீர் வரத்து ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுருளி அருவியில் ஜூலை 21-இல் நீர்வரத்து ஏற்பட்டது, பின்னர் ஜூலை. 26-இல் நீர்வரத்து குறைந்தது.
தற்போது புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் வியாழக்கிழமை அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது. தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அருவியில் நீர்வரத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.