குளச்சல் போர் வெற்றித்தூணில் வீர வணக்க நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர் மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில் மாவட்டம் குளச்சல் கடற்கரையில் 279 வருடங்களுக்கு முன்பு டச்சுப்படையினருக்கும் திருவாங்கூர் சமஸ்தான படையினருக்கும் 2 மாதங்கள் போர் நடந்தது. 1741 ஆம் ஆண்டு ஜூலை 31ம் தேதி திருவாங்கூர் படை சச்சுப்படையை வென்றது.
இந்த போரின் வெற்றி நினைவாக திருவாங்கூர் சமஸ்தானம் குளச்சல் கடற்கரையில் வெற்றித்தூண் ஒன்றை நிறுவியது. கடந்த சில வருடங்களாக மெட்ராஸ் ரெஜிமெண்ட் சார்பில் இந்த வெற்றித்தூணில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வருவதால் இந்த வருடம் குளச்சல் போர் வெற்றித்தூணில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறாது என ரெஜிமெண்ட் வட்டாரம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டு மெட்ராஸ் ரெஜிமெண்ட் 9ஆவது பட்டாலியன் கமெண்டிங் ஆபிசர் தாஸ் உள்பட 10 வீரர்கள் வெள்ளிக்கிழமை காலை குளச்சல் போர் வெற்றித்தூண் வளாகம் வந்து எளிமையான முறையில் தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதில் குளச்சல் எம்.எல்.ஏ.பிரின்ஸ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜெயந்தி, சுகாதார அலுவலர் நட்ராயன், பங்குத்தந்தை மரிய செல்வன், கிழக்கு மாவட்ட காங்.தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மீனவர் காங்.தேசிய செயலாளர் சபின், மாவட்ட காங்.செயலாளர் தர்மராஜ், நகர்மன்ற முன்னாள் தலைவர் நசீர், நகர காங்.தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர்கள் அந்திரியாஸ், பிரான்சிஸ், தி.மு.க.பொறுப்பாளர் ரகீம் உள்பட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.