சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16 ஆம் தேதி வெளியான நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 96.04% மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் 94.38% பேரும், மாணவிகள் 97.49% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை மாவட்டம் 98.10% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. 97.90 % தேர்ச்சியுடன் விருதுநகர் 2வது இடமும், 97.51 % தேர்ச்சியுடன் கரூர் 3வது இடமும் பெற்றுள்ளது. அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் 92.71% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் 96.95% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 1% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவர்களை விட 3.11% பேர் கூடுதலாக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களுடைய பதிவு எண், பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் உள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்படும்.
மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவிக்கப்பட்டுள்ளது.