கடந்த மார்ச் மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஜூன் மாதம் 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை மண்டலத்தில் ரூ.1000 மாதாந்திர சலுகைக் கட்டண பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஆயிரம் ரூபாய் மாதாந்திர பேருந்து பயண அட்டை எடுத்தவர்கள், அதை ஜூன் 15-ம் தேதி வரை பயன்படுத்தலாம்.
பொது முடக்கத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டு ஜூன் 1-ம் தேதி முதல் 50 சதவீத பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.
எனவே, மார்ச் மாதம் பெற்ற மாதாந்திர பேருந்து பயண அட்டையை ஜூன் 15 வரை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெறுவர்.