திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
61 வயதான அன்பழகன் ஏற்கனவே கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 80% ஆக்சிஜன் வெண்டிலேட்டர் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.