மக்கள் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்கு முகக்கவசம் அணிந்தால் கரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி வளாகத்தில் ஆணையர் பிரகாஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னையில் கரோனா பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது. மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து வந்ததால் பரவல் குறைந்துள்ளது. கரோனாவால் இறப்பு சதவீதத்தை குறைக்க வேண்டும்.
கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் தொடர்ந்து அடுத்த ஒரு மாதத்திற்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மக்கள் இதனைப் பின்பற்றினால் கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று தெரிவித்தார்.
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையின்றி வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.