ஸ்ரீவைகுண்டம்: சிவகளையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்தில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. சிவகளை பரம்பில் 4 பகுதிகளாக அளவீடு செய்யப்பட்டு குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொல்லியல் துறை சிவகளை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் மற்றும் தங்கதுரை ஆகியோரது மேற்பார்வையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், இரண்டு முதுமக்கள் தாழியின் விளிம்புப் பகுதிகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதனை தொல்லியல் துறையினர் எவ்வித சேதமும் இன்றி வெளியில் எடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
சிவகளையில் தொடர்ந்து நடைபெறவுள்ள அகழாய்வுப் பணிகளில் கிடைக்கும் பொருள்களின் மூலம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் நாகரிகம் வெளிப்படும் என வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.