10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை (செவ்வாய்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தொடக்கத்தில் ஜூன் 15 ஆம் தேதி தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்றும் ஜூலை 2 ஆவது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றி தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றியும், பள்ளிகள் திறப்பது பற்றியும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடன் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.