நியூசிலாந்துபோல் சென்னையையும் கரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டார். அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், கே.பி. அன்பழகன், ஆர். காமராஜ், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் ஐந்தாகப் பிரித்து ஒவ்வொரு அமைச்சருக்கும் மூன்றாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை அயனாவரத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார், சென்னையில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா இல்லாத திரு.வி.க. நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள் என நம்புகிறேன். கரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் மாற்ற முடியும். கரோனா பரவலை தடுக்க தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றார்.