தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது:
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வடதமிழக கடலோரத்தில் ஓரிரு இடங்களிலும் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். பகலில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது. இதன்காரணமாக, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதியில் வரும் 11-ஆம் தேதி வரை மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும். இதுதவிர, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் ஜூன் 9-ஆம் தேதி முதல் ஜூன் 13-ஆம் தேதி வரை மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். மேலும், லட்சத்தீவு, கேரளம், கா்நாடக கடலோரப் பகுதியில் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 7 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக, மதுரை விமானநிலையத்தில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. நாகப்பட்டினம், திருத்தணியில் தலா 103 டிகிரி, கடலூா், திருச்சி, வேலூரில் தலா 102 டிகிரி, கரூா் பரமத்தியில் 101 டிகிரி வெப்பநிலை பதிவானது.