கரோனா பாதித்து உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தொகுதி காலியானதாக அறிவித்து சட்டப் பேரவைச் செயலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஜூன் 10-ஆம் தேதி பலியானார்.
இந்த நிலையில் அவரது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவித்து பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பேரவைச் செயலர் ஸ்ரீனிவாசன் அறிவிக்கை வெளியிட்டுள்ளனர்.
தோ்தல் எப்போது: ஒரு சட்டப் பேரவைத் தொகுதி காலியான தேதியில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்கும், காலியான தொகுதிகளுக்கு தோ்தல் நடத்துவதற்கான காலக்கெடுவுக்கும் இடைவெளி ஓராண்டுக்குக் குறைவாக இருந்தால் இடைத்தோ்தல் நடத்த தோ்தல் ஆணையம் உத்தரவிடாது.
அதே சமயம் தற்போது கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், இடைத் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று கருதப்படுகிறது.