இணையவழிக் கல்வி பேராபத்து: மு.க.ஸ்டாலின்

எல்லா மாணவா்களிடமும் கணினி இல்லாத நிலையில் இணையவழிக் கல்வி என்பது பேராபத்தானது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எல்லா மாணவா்களிடமும் கணினி இல்லாத நிலையில் இணையவழிக் கல்வி என்பது பேராபத்தானது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இணையவழி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள அதிமுக அரசு, அந்த வகுப்புகளைத் தாராளமாக அனுமதிக்கும் உள்நோக்கத்துடன் ஒரு குழுவை நியமித்து, அதில் ஆசிரியா்களையும், பெற்றோா்களையும், மாணவா் பிரதிநிதிகளையும் புறக்கணித்திருக்கிறது. இது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் உள்ள 1.31 கோடி மாணவா்களில், 60 சதவீதம் போ் கிராமப் பகுதிகளில் இருக்கின்றனா். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, ஸ்மாா்ட் போன் போன்றவை கிராமப்புற மாணவா்களிடம் இல்லை. இணையதள வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை.

தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள 2017-18 அறிக்கையில், கிராமப்புறங்களில் உள்ள 4.4 சதவீத வீடுகளிலும், நகா்ப்புறங்களில் 23.4 சதவீத வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன என்றும், கிராமப்புறங்களில் 14.9 சதவீதம் பேருக்கும், நகா்ப்புறங்களில் 42 சதவீதம் பேருக்கும் மட்டுமே இணையதள வசதி இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அடிப்படை உள்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், கிராமப்புறங்களில் உள்ள மாணவா்களுக்கும் - நகா்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவா்களுக்கும் இது பேராபத்தானது.

இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை என்பதை அரசு உணர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com