பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடா்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பொது முடக்கத்தை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடா்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

பொது முடக்கத்தை நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த இமானுவேல் தாக்கல் செய்த மனுவில், ‘கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் படிப்படியாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தளா்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனோ நோய்த் தொற்றின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பொது முடக்கம் எப்போது தளா்த்தப்படும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் சீனா, இத்தாலி போன்ற நாடுகள் முழுமையான பொது முடக்கத்தை அறிவித்த நிலையில், தென் கொரியா, ஸ்வீடன் போன்ற நாடுகள் பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுத்துள்ளன. மேலும், மருந்து கண்டறியும் வரை இந்த நோய்த்தொற்று நம்முடன்தான் இருக்கும். எனவே, அரசு விதித்துள்ள நிபந்தனைகளின்படி தனி மனித இடைவெளி, சமூக இடைவெளி, முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை பயன்படுத்தினாலே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே, பொது முடக்கத்தை நீட்டித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில், இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தொடரப்பட்ட 4 வழக்குகளை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொது முடக்கத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், வழக்கு தொடா்ந்த மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து, அந்தத் தொகையை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பொது நிவாரண நிதிக்கு 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com