சென்னை: கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் அமைச்சர் அன்பழகனை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே.பி. அன்பழகனுக்கு கரோனா பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக யுஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.
எனினும் அமைச்சர் தரப்பில் இருந்தோ, தமிழக அரசு தரப்பிலோ இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் அமைச்சர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
ஏற்கெனவே, திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜே. அன்பழகன் கரோனா தொற்றால் உயிரிழக்க நேரிட்டது. அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான கே. பழனி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.