பிபிஇ கிட், கையுறைகள், மருத்துவப் பயன்பாட்டுக்கான முகக்கவசம் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) தலைவர் ஆ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பிபிஇ கிட் உற்பத்தியில்லாமல் இருந்த வந்தது. ஆனால் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆடைகளுக்கான தேவைகளைக் கணக்கில் கொண்டு தற்போது நாள்தோறும் 8 லட்சம் பிபிஇ கிட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த பிபிஇ கிட், மருத்துவப் பயன்பாடுகளுக்கான முகக் கவசம், கையுறைகள் ஆகியவற்றின் தேவையானது உலக அளவில் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் உலக சந்தையில் 60 பில்லியன் டாலர் (ரூ.4.5 லட்சம் கோடி) அதிகமாக பிபிஇ கிட் உடைகளின் தேவை இருக்கும். தற்போதையை நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிபிஇ கிட், மருத்துவப் பயன்பாட்டுக்கான முகக்கவசம், கையுறைகளுக்கான வர்த்தக விசாரணைகளும் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளது.
ஆகவே, பிபிஇ கிட், முகக் கவசம் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடையை நீக்க முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.