விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலைய வளாக நிழல் தரும் மரங்கள் பராமரிப்பிற்கு ஜெயண்ட்ஸ் குழு அமைப்பினர் சார்பில் ரூ.5000 நன்கொடையானது ரயில் நிலைய அதிகாரியிடம் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தின் முன்புறம் சுமார் 20க்கு மேற்பட்ட நிழல் தரும் மரங்கள், பசுமையைப் பேணும் பொருட்டு வளர்க்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழைப் பொழிவு குறைவானதாலும், அதிக வெயில் காரணமாகவும், பராமரிக்க உரிய பணியாளர்கள் பற்றாக்குறையாலும் அவற்றில் சில மரங்களின் கிளைகள் வாடிப்போய் காய்ந்துவிட்டன.
இதையறிந்த ஜெயண்ட்ஸ் குழு அமைப்பினர் அம்மரங்களை போதிய நீர் விட்டுப் பராமரிக்க ஏற்பாடு செய்தனர். இதன்படி லாரி மூலம் நீரை விலைக்கு வாங்கி மரங்களுக்குத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பராமரிக்க ரயில் நிலைய அதிகாரியிடம் ரூ.5 ஆயிரத்திற்கான நன்கொடையை ஜெயன்ட்ஸ் குழு அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா அமைப்பு இயக்குநர் திருவண்ணாமலை தலைமையில் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கப்பட்டது.
உடன் அவ்வமைப்பின் அருப்புக்கோட்டை கிளைத் தலைவர் எஸ்.ஏ, சாதலி, செயலாளர் கே.இராமச்சந்திரன், பொருளாளர் எஸ்.அண்ணாதுரை உள்ளிட்டோரும், பிற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.