தமிழகத்தில் முழு மது விலக்கினை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விதவைப் பெண்கள் வாழ்வாதாரச் சங்கத்தின் சார்பில் பெண்கள் அரசுக்கு செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
உலக விதவைப் பெண்கள் தினம் ஜூன் 23ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் மூலம் விதவைப் பெண்கள் வாழ்வுரிமைச் சங்கத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட மனுவின் கோரிக்கை விபரம்:
விதவைப் பெண்கள் மீதான பாகுபாடுகளைப் போக்கத் தனியாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். ஆதரவற்ற விதவைகளுக்கான மாத .உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தவும், நிபந்தனைகள் இல்லாமல் உதவி வழங்க வேண்டும். விளிம்பு நிலை வாழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டு வாழும் பெண்களுக்கு இலவச வீட்டுமனை, வீடு கட்டிக் கொடுக்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டது.
கரோனா தொற்று காரணமாக உலக விதவைப் பெண்கள் தின நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டு கோரிக்கைகள் மனுவாக அளிக்கப்பட்டது. இதில், அமைப்பின் நாகை மாவட்டத் தலைவர் கே.புஷ்பா தலைமை வகித்தார். மண்டலத் தலைவர்கள் வி.பிளோனா, வி.மகரஜோதி, கே.சாந்தி, கே.சத்யா, ஆர்.ஜெயலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.