தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,865 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 2,865 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 2,774, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 91.
இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் இன்று 1,654 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 33 பேர் (தனியார் மருத்துவமனை -8, அரசு மருத்துவமனை -25) பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 37,763 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் இருப்பவர்கள் உள்பட மொத்தம் 28,836 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்றைக்கு மீண்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 32,079 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 9,76,431 ஆக உயர்ந்துள்ளன. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் மட்டும் இன்று 9,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 47 அரசு ஆய்வகங்கள், 41 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 88 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.