தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 3,713 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,713 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டவர்கள் 3,624 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் 89 பேர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,939 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இன்றைய அறிவிப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு 68 பேர் (தனியார் மருத்துவமனை - 23, அரசு மருத்துவமனை - 45) பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 பேர் வேறு எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் பலியாகியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று மட்டும் 2,737 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 44,094 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 33,213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 34,805. இதுவரை மொத்தம் 10,77,454 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 47 அரசு ஆய்வகங்கள் மற்றும் 42 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 89 ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.