தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, சென்னையில் இதுவரை 51,699 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 776 பேர் உயிரிழந்துள்ளனர். 31,045 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 19,877 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து, சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தோர் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,455 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.
அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்தில் 6,221 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 5,758 பேரும், கோடம்பாக்கத்தில் 5,432 பேரும், அண்ணா நகரில் 5,506 பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.