சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது பொது முடக்கத்தை நீட்டிக்குமாறு பரிந்துரை செய்யவில்லை என்று மருத்துவக் குழு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நிறைவடைந்துள்ளது. மருத்துவ நிபுணா்கள் குழுவைச் சோ்ந்த சிலருடன் காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர், கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏழாவது முறையாக தமிழக முதல்வர் பழனிசாமியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் தரப்பில சில பரிந்துரைகளை முன் வைத்துள்ளோம்.
தற்போது சென்னையில் நாள் ஒன்றுக்கு கரோனா பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கரோனா பரிசோதனை 13 ஆயிரமாக உள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் பொது முடக்கத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைக்கவில்லை. கரோனாவுக்கு பொதுமுடக்கமே தீர்வல்ல என்றும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
சென்னையைப் போலவே பிற மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். சென்னையில் எடுத்த முன்னெச்சரிக்கைக் காரணமாகவே இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்று ஐசிஎம்ஆர் மருத்துவர் பிரதீப் கௌர் கூறியுள்ளார்.
மேலும், பொது முடக்கத்தால் கரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கலாம்.
நல்ல முயற்சியாக, சென்னையில் மருத்துவ முகாம்கள் அமைத்து காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிந்து விரைவாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது மற்ற நகரங்களுக்கும் விரிவு செய்யப்பட வேண்டும். அதே சமயம், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது. பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பது நல்ல அறிகுறி என்றும் பிரதீப் கௌர் கூறியுள்ளார்.