காங்கயம் பேருந்து நிலையம் அருகே, நிலக்கரி ஏற்றி வந்த லாரி சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பகுதிக்கு நிலக்கரி ஏற்றிக் கொண்டு ஒரு லாரி காங்கயம் வழியாக வந்துகொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பொன் மாரியப்பன் (35) என்பவர் ஒட்டி வந்தார். காங்கயம் பேருந்து நிலையம் அருகே, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, லாரியின் முன் டயர் திடீரென பழுதானதால், சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது இந்த லாரி மோதியது.
இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பினார். லாரியின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. போக்குவரத்தைச் சரி செய்வதற்காக காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரன் ஏற்பாட்டில், விபத்துக்குள்ளான லாரியில் இருந்த நிலக்கரி வேறு லாரிக்கு மாற்றப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதனால், காலை 9 மணியளவில் காங்கயம் பேருந்து நிலையம் முன்பாக ஒரு மணி நேரம் போக்குவரத்து வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டது.