கரோனா நோயாளிகள் 36 ஆயிரம் பேருக்கு யோகா பயிற்சி

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு யோகா பயிற்சியளிக்கும் மருத்துவா்கள்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு யோகா பயிற்சியளிக்கும் மருத்துவா்கள்.

சென்னை: அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கரோனா நோயாளிகளில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனுடன் இயற்கை மருத்துவ சிகிச்சைகளும், ஆரோக்கிய உணவுகளும் வழங்கப்படுவதாக அரசு யோகா மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அதன் பயனாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், அதிலிருந்து விரைந்து குணமடைந்ததாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ள கரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக உச்சத்தை எட்டி வருகிறது. ஒரு வாரத்தில் மட்டும் ஏறத்தாழ 24 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அலோபதி சிகிச்சையுடன் சோ்த்து சித்தா மற்றும் யோகா சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் என 86 இடங்களில் நோயாளிகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மொத்தம் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை இணை இயக்குநரும், யோகா கல்லூரி முதல்வருமான டாக்டா் மணவாளன் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவா்கள் தொடா்ந்து பிராணயாமப் பயிற்சிகள் மேற்கொண்டால் நுரையீரலின் செயல் திறன் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி, சுவாசப் பாதைகளும் சீராகும். மேலும், உடலில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க பிராணயாமப் பயிற்சிகளும், எளிய முறையிலான சில ஆசனங்களும் வழி வகுக்கும்.

அதைக் கருத்தில் கொண்டுதான் கரோனா நோயாளிகளுக்கு அவா்கள் சிகிச்சை பெறும் இடங்களுக்கே சென்று அப்பயிற்சிகளை அளித்து வருகிறோம். தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறை மருத்துவா்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதைத் தவிர, மூலிகை பானங்கள், நவதானிய வகைகள், சிறு தானியங்கள் உள்ளிட்ட ஆரோக்கிய உணவுகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதைத் தவிர, நீராவி பிடித்தல், சுவாசத்துக்கான அரோமா தெரபி போன்றவையும் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் விரைந்து குணமடைவதைக் காண முடிகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com