பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-2021 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 17ஆம் தேதி மீண்டும் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் 20ஆம் தேதி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மார்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். மேலும் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் எந்தெந்த நாள்கள் நடைபெறும் என்பது தொடர்பாகவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் 2020-2021ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14ம் தேதி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில்தான், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.