சென்னை: தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் செவ்வாயன்று சந்தித்துப் பேசினார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிட்டது. அப்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களாவை இடம் ஒதுக்குவதாக அதிமுக வாக்களித்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் கூட அதுதொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூட்டமொன்றில் பேசிய போது, கட்சியினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் செவ்வாயன்று சந்தித்துப் பேசினார்.
தேமுதிகவுக்கு தருவதாக கூறப்பட்ட மாநிலங்களவை சீட் குறித்துதான் அவர்கள் இருவரும் பேசியதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாகத்தான் அவர் முதல்வர் பழனிசாமியைச் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.