ஈரோடு: ஈரோட்டில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள அரியவகை கடல் பொருட்களை இணையம் மூலம் விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினருக்கு Olx என்ற ஆன்லைன் மூலம் அரிய வகை கடல் பொருட்கள் விற்பனைக்கு இருப்பதாக தகவல் கிடைத்தது .இதனை அடுத்து கடந்த மூன்று மாதங்களாக அரிய வகை கடல் பொருட்களை விற்க முயன்றவர்களுடன் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் பேசி பொருட்களை வாங்க இருப்பதாக கூறி ஈரோட்டிற்கு வரவழைத்தனர்.இதனையடுத்து அரிய வகை கடல் பொருட்களுடன் வந்த இரண்டு இளைஞர்களை ஈரோடு வனத்துறையினர் மற்றும் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரித்தனர்.
வனத்துறையினர் விசாரணையில் அவர்கள் ஈரோட்டைச் சேர்ந்த வீர ராஜ்குமார், நகுலேசன் என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து பவளப்பாறைகள் , கடல் பஞ்சு , கடல் விசிறி , சிலந்தி சங்கு , மாட்டுத்தலை சங்கு , கோப்பை வடிவ பவளப்பாறைகள் என்பன உள்ளிட்ட அரிய வகை கடல் பொருட்களை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 80 லட்ச ரூபாய் இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.