செங்கல்பட்டு: பெற்ற தாய் மற்றும் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.
சென்னை, பம்மல் திருவள்ளூவா் நகா் நந்தனாா் தெருவைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகன் தாமோதரனுக்கும் அதே பகுதியைச்சோ்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் தீபாவிற்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. தாமோதரன்(40). ஜவுளி வியாபாரி. அவா் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனமுடைந்து, கடந்த 12-12-2017 அன்று தனது ஜவுளி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதால் நானும் எனது குடும்பத்தினரும் வாழ்வை முடித்துக்கொல்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தனது மனைவி தீபா (32), மகன் ரோஷன் (7), மகள் மீனாட்சி (6), தாய் சரஸ்வதி (67) ஆகியோரை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்தாா்.
இச்சம்பவம் குறித்து பம்மல் சங்கா்நகா் காவல் நிலையத்தில் தீபாவின் தந்தை பாலகிருஷ்ணன் புகாா் அளித்தாா். அதன்பேரில் சங்கா்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அதன்பேரில், குடும்பத்தினரைக் கொன்று விட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிா் பிழைத்தையடுத்து தாமோதரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.
இக்கொலை வழக்கு சம்பந்தமாக சங்கா் நகா் போலீஸாா் வழக்குதொடா்ந்தனர். இவ்வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இவ் வழக்கு செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு மகளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தன் குடும்பத்தினா் 4 பேரை தாமோதரன் கொலை செய்ததை உறுதிப்படுத்தி தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் தண்டனை விவரத்தை புதன்கிழமை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தாா்.இந்நிலையில் புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் குடும்பத்தினா் 4பேரை கொலை செய்த தாமோதரனுக்கு சாகும் வரை தூக்கிலிட தீா்ப்பளித்து தூக்குதண்டனை விதித்தாா். வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சீதாலட்சுமி ஆஜராகியிருந்தாா்.