சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசினார்.
அரசியல் கட்சி கொள்கைகள் குறித்து பேசிய அவர், 'அரசியலில் இரு பெரும் ஜாம்பவான்கள் இருக்கின்றனர். அசுர பலத்துடன் இருக்கிறார்கள். ஒருவரது கட்சி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. அவரது கட்சியின் ஆளுமை மிக்க தலைவர் இப்போது இல்லை. அவரது வாரிசு என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. ஆள் பலம், பண பலம், கட்டமைப்பு. ஆட்சியை கைப்பற்ற எந்த யுக்தி வேண்டுமானாலும் செய்வார்கள்.
மற்றொரு கட்சி ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு குபேர கஜானாவை தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்சி புரிந்து வருகிறது.
கடந்த கால தேர்தல்களில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் 30% பேர் கட்சிக்காகவும், ஜெயலலிதாவுக்காக 70% பேரும் வாக்களித்தனர். அதுபோலவே திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கட்சிக்காக 30% பேரும், கருணாநிதிக்காக 70% பேரும் வாக்களித்தார்கள்
நாம், சினிமா புகழ், ரசிகர்களை வைத்துக்கொண்டு ஜெயிக்க முடியுமா? அரசியலுக்கு வருவது என்ன சாதாரண விஷயமா?
என்னை நம்பி வருவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. இந்த வயதில் இதெல்லாம் எனக்கெல்லாம் தேவையில்லை.
எனவே, கட்சி தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை மக்கள், தொண்டர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டுமெனில் மக்களிடம் புரட்சி அலை உருவாக வேண்டும். அந்த எழுச்சி ஏற்பட்ட பின்னர் அரசியலுக்கு வருகிறேன்' என்றார்.