சிவகாசி பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசிப் பகுதியில் உள்ள 6 பட்டாசு ஆலைகளில் சிபிஐஅதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகாசி பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசிப் பகுதியில் உள்ள 6 பட்டாசு ஆலைகளில் சிபிஐஅதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 காற்று மாசுக்கு பட்டாசு உற்பத்தி காரணமாக இருப்பதாகக் கூறி அதன் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அர்ஜுன் கோபால் என்பவர், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 இந்த வழக்கில் 2018 அக்டோபர் 23 -ஆம் தேதி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு , பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்தல், பேரியம் நைட்ரேட் ரசாயனத்தைப் பயன்படுத்தக்கூடாது போன்ற நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்திருந்தது.
 கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது , பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாமல் பசுமைப் பட்டாசுகள் தயாரித்து, அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை (பெஸோ) ஒப்புதல் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு தயாரிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், குறைவான அளவு பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரிக்க உற்பத்தியாளர்கள் அனுமதி கோரினர். இதையடுத்து, உச்சநீதிமன்றம், சிறிதளவு பேரியம் நைட்ரேட் கலந்து பட்டாசு தயாரிக்க அனுமதி அளித்து, தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை அமைக்கவும் உத்தரவிட்டது.
 இந்தநிலையில், இந்த வழக்கு மார்ச் 3 -ஆம் தேதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே , நீதிபதிகள் சூரியகாந்த், பி.ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தடை செய்யப்பட்ட ரசாயனம் கலந்த பட்டாசு தயாரிக்கப்படுகிறது எனக் கூறினார். பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றியே பட்டாசு தயாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.
 இதையடுத்து, பட்டாசு தயாரிப்பாளர்கள், உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 இதைத் தொடந்து, வியாழக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சுப்பையன் மற்றும் சுந்தரவேல் தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவினர், சிவகாசிப் பகுதியில் உள்ள 6 பட்டாசு ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்டிருந்த பட்டாசுகள், அங்கிருந்த ரசாயனப் பொருள்களின் மாதிரிகள் ஆகியவற்றை சேகரித்துக் கொண்டனர். மேலும், ஆலை அலுவலகத்தில் உள்ள கோப்புகளையும், பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை உள்ளிட்ட விவரங்களையும் எடுத்துச் சென்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com