மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் நோய் மற்றும் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில், கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும், விழிப்புணர்வு பிரசாரங்களிலும் அரசு போர்கால அடிப்படையில் செயல்பாடுகளை செய்து வருகிறது. அதனைத்தொடர்ந்து நோய் குறித்த விழிப்புணர்வை அடிப்படை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அரசு தரப்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் போக்குவரத்து காவல்துறை மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் கரோனா வைரஸ் நோய் மற்றும் தலைக்கவசம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
முன்னதாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரிஸ்வான பர்வீன் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து காமராஜர் சிலை அருகில் உள்ள அரசினர் பொது மருத்துவமனை வளாகத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியை காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், காவல் ஆய்வாளர்கள் கண்ணதாசன், பாண்டிவேலு ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
பேரணி கோவில்பட்டி ரோடு, புதுத்தெரு, பேருந்து நிலையம், பெரியார் சிலை திடல், திண்டுக்கல் ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நொச்சிமேடு பகுதியில் நிறைவுபெற்றது. இதில் காவல்துறையினர் மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தினர் சீருடை அணிந்தும், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாகக் கலந்துகொண்டனர்.