ஈரோட்டில் மேம்பால தூணில் அரசு பேருந்து மோதிய விபத்தில் நடத்துனர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு சூரம்பட்டிவலசுக்கு இன்று இரவு அரசு நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சவிதா சிக்னல் பகுதியில் திரும்பியபோது, இடது புறமாக மற்றொரு பேருத்து நின்று கொண்டிருந்தது. இதனால் ஓட்டுநர் செல்வன் பேருந்தை வலது புறமாக ஓட்டிச்சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மேம்பாலத்தின் தூணின் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்தது. மேலும், முன்பக்க கண்ணாடியும், ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கியது. இந்த விபத்தில் பேருத்தில் இருந்த நடத்துனர் ரஞ்சித்குமார், பயணி அன்பரசு (18) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் சில பயணிகள் லேசான காயத்துடன் தப்பினார்.
விபத்து ஏற்பட்டதும், அக்கம் பக்கத்தனர் அங்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித்குமார், அன்பரசு ஆகியோரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.