மதுரையில் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் கைகளைக் கழுவிவிட்டு வருவதற்காக சோப்பு, கை காப்பான் திரவம் (ஹேண்ட் சானிட்டைசர்) வழங்கப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி மருந்துகளைத் தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மதுரையில் ரேஸ்கோர்ஸ் டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கம் மூடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மைதானங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மாநகராட்சி ராஜாஜி பூங்கா மூடப்பட்டுள்ளது. சின்ன சொக்கிக்குளம் பகுதியில் உள்ள வணிக வளாகம், அரசு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டதையடுத்து வழக்கமான வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் சற்று குறைந்திருக்கிறது. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கினாலும், பொதுமக்களின் வருகை குறைவாக இருந்தது.
அரசு அலுவலகங்களுக்கு வருவோர், கைகளைக் கழுவிவிட்டு உள்ளே வருவதற்காக கை காப்பான் திரவம், சோப்பு மற்றும் தண்ணீர் போன்றவை அலுவலகங்களுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன. கைகளைச் சுத்தம் செய்த பிறகு அலுவலகங்களுக்கு வருமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.