போதிய முன்பதிவு இல்லாததால் 14 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே 14 ரயில்களை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா பாதிப்பு சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் கரோனாவுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பீதியால் தெற்கு ரயில்வேயில் பயணிகளின் எண்ணிக்கை இருபது சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், போதிய முன்பதிவுகள் இல்லாததாலும், கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாகவும் எக்ஸ்பிரஸ், துரோந்தோ உள்ளிட்ட 14 விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களின் சேவையை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.