ஈரோடு: கரோனா குறித்து கட்செவி அஞ்சல் மூலம் தவறான தகவல்ளை வெளியிட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இளைஞரை போலீஸார் புதன் இரவு கைது செய்தனர்.
பெருந்துறை வட்டம், நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் த.வெங்கடாசலம்(30), மின் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வரும் இவர், கரோனா வைரஸ் குறித்து தவறான தகவலை கட்செவி அஞ்சல் மூலம் பரவச்செய்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்த பெருந்துறை போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கரோனா வைரஸ் குறித்து சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.